ஏன் அப்படி சொன்னார் சுஜாதா?

ஏன் அப்படி சொன்னார் சுஜாதா?
“என் ‘தூர்’ கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க என் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது.
அன்று நா. முத்துகுமார் மேல் விழுந்த அந்த மஞ்சள் வெளிச்சம், மஞ்சள் காமாலையாக மாறி அவரது உயிரைக் குடிக்கும் என யார் கண்டார்கள்?
யாரும் எதிர்பார்க்காத ஒரு காரியத்தை அந்த மேடையில் செய்தார் சுஜாதா!
அது ஒரு விழா மேடை.
மிகப் பெரும் கூட்டம்.
பேசிக்கொண்டே இருந்த சுஜாதா, பேச்சின் நடுவே திடீர் என்று இப்படிச் சொன்னார்:
“இப்போது இங்கே நான் ஒரு இளைஞர் எழுதிய கவிதையை வாசிக்கப் போகிறேன்.
கவிதையின் தலைப்பு “தூர்.”
இப்படிச் சொல்லிவிட்டு கவிதை வரிகளை சுஜாதா வாசிக்க வாசிக்க, கூடி இருந்த கூட்டம் அசையாமல் அமர்ந்து அமைதியோடு கவிதை வரிகளை ரசித்துக் கொண்டிருந்தது.
சுஜாதா வாசித்த அந்த கவிதை:
“வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒரு முறை
விசேஷமாக நடக்கும்.
ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்…
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்…
எடுப்போம் நிறையவே
‘சேறுடா சேறுடா’ வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.
இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.
கடைசி வரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூர் எடுக்க.”
சுஜாதா கடைசி வரிகளை வாசித்து முடிக்கவும் பலத்த கை தட்டல்.
அந்தக் கைதட்டல்களுக்கு இடையே சுஜாதா சொன்னார் இப்படி : “இந்த அற்புதமான கவிதையை எழுதியவர் பெயர் நா. முத்துகுமார்.”
மீண்டும் கை தட்டல்.
கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞரைச் சுற்றி சிறு சலசலப்பு ஏற்பட,
சுஜாதா கேட்டார்: “அந்த முத்துகுமார் இந்தக் கூட்டத்தில் இருக்கிறாரா, என்ன?”
ஆம்.
அந்தக் கூட்டத்தில்தான் இருந்தார்.
கூட்டத்திலிருந்து முத்துகுமார் கைதூக்க, உடனே அவரை மேடைக்கு வரவழைத்து எல்லோருக்கும் அவரை அறிமுகப்படுத்தி ஏராளமாகப் பாராட்டியிருக்கிறார் சுஜாதா.
அதுபற்றி நா.முத்துகுமார்:
“என் ‘தூர்’ கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க என் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது. நண்பர்கள் பாடல் எழுத அழைத்தார்கள்.
விளையாட்டாக எழுதத் தொடங்கி அதிக பாடல்கள் எழுதும் பாடலாசிரியர் என்கிற நிலை வரை ஓடிக்கொண்டு இருக்கிறேன்.”
அன்று நா. முத்துகுமார் மேல் விழுந்த அந்த மஞ்சள் வெளிச்சம், மஞ்சள் காமாலையாக மாறி அவரது உயிரைக் குடிக்கும் என யார் கண்டார்கள்?
ஆனால் முத்துகுமார் பற்றி சொல்லும்போது இந்த வார்த்தைகளை எதற்காக சுஜாதா சொன்னார் என்று எத்தனையோ முறை யோசித்தும் புரியவே இல்லை எனக்கு!
சுஜாதா சொன்னது:
“நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கி விடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்.”
ஏன் அப்படிச் சொன்னார் சுஜாதா?

எவ்வளவோ சிந்தித்தும் புரியவில்லை எனக்கு!
-ஜான் துரை ஆசிர் செல்லையா
நன்றி: மாலை மலர்