செவ்வாய் கிழமை என்றாலே முருகனுக்கு உரிய நாள்

செவ்வாய்க்கிழமையும் முருகனுக்கு ஏற்ற சஷ்டி விரதமும் செவ்வாய் கிழமை என்றாலே முருகனுக்கு உரிய நாள். அதனால் செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வழிபாடு செய்யவும், அவருக்கான விரதம் இருப்பதற்கும் மிக சிறந்த நாள் ஆகும். அதற்கான காரணங்களும், அதன் பலன்களும் என்ன என்பதைப் பார்ப்போம்… முருகா என்றால் அனைத்து துன்பங்களும் பறந்துவிடும் என்பார்கள். அப்படிப்பட்ட முருகப் பெருமானை நினைத்து செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பதால் வருவாய் அதிகரிக்கவும், குடும்ப அமைதி, மன நிம்மதி அனைத்தும் தேடி வரும். ஒருவரின் செல்வ நிலை உயர காரணமானவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். அந்த செவ்வாய் பகவானுக்குரியவர் தான் நம் தமிழ் கடவுள் முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. அதனால் தான் செவ்வாய் கிழமை முருகன் மற்றும் சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளாக பக்தர்களால் வணங்கப்படுகிறது. எப்படி விரதம் இருப்பது அல்லது வணங்குவது! முருகனுக்குப் பிடித்த செந்நிற ஆடையை அணிந்து வழிபடுவது நல்லது. அதே போல் செந்நிற நைவேத்தியம், கனிகளை வைத்து தீபாராதனை செய்து வழிபடுவதால் நம் வாழ்வில் இருக்கும் தங்கு தடைகள் நீங்கி வாழ்க்கை சீராகும். அதோடு எதிர்பாராத அளவு புகழும், சக்தியும், நல்ல மங்கல நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. அதே போல் உள்ளத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். முருகனின் வேலை வணங்குவதே என் வேலை என வீட்டில் வேல் வைத்து வழிபடுவது நல்லது. வீட்டு பூஜை அறையில் வேல் வைத்து அதன் இரு புறமும் இரு விளக்குகளில் ஒவ்வொன்றிலும் மூன்று மூன்று திரிகள் என ஆறு தீபங்கள் ஏற்றி வழிபட்டு வருவதால் நம் வாழ்வில் சீரும், சிறப்புகள் வந்து சேரும். இதோ புராண கதைகள் நாம் விரதம் இருக்கும் போது நாம் வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானின் படத்தை வைத்து வணங்குவது நல்லது. விரதத்தை தொடங்கும் போது முருகனின் அண்ணனும், முழுமுதல் கடவுளான விநாயகரை வணங்கி விரதத்தை தொடங்க வேண்டும். கார்த்திகேயன் அன்னதானப் பிரபு என்பதால், இந்த விரதம் மேற்கொள்ளும் போது உங்களால் முடிந்தளவு அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பான பலன் தரும். முருகப்பெருமானின் அருள் பெறலாம். எந்த நட்சத்திரம் விசேஷமானது : முருகனுக்கு உகந்த நட்சத்திரமாக கார்த்திகை நட்சத்திரமும், விசாக நட்சத்திரமும் உள்ளது. இந்த கார்த்திகை, விசாக நட்சத்திரம் செவ்வாய்க் கிழமைகளில் அமைந்து அன்று நாம் விரதம் மேற்கொள்ள அந்த விரதத்திற்கு பலன் மிக அதிகம். முருகனுக்கு சஷ்டி திதி மிகவும் சிறப்பானது. சஷ்டியில் விரதம் இருக்க அகப்பையில் குழந்தை வரும் என்பது முன்னோர்களின் அருள் வாக்கு. முருகனை நினைத்து சஷ்டியில் விரதம் இருப்பது நல்லது. அதுவும் செவ்வாய் கிழமையில் அமைந்தால் அதற்கு மாபெரும் சக்தி உண்டு. விரத நாளில் கந்த சஷ்டி கவசம் உள்ளிட்ட முருகனுக்கு உகந்த பாடலைப் பாடுவது மிகவும் உன்னதமானது.

Manjula Yugesh