சினிமா

உங்க கிட்ட இசை இருக்கு, என்கிட்டே பாட்டு இருக்கு

உங்க கிட்ட இசை இருக்கு, என்கிட்டே பாட்டு இருக்கு”… பாடல் மூலமே இளையராஜாவிடம் மறைமுகமாக வாய்ப்பு கோரிய கவிஞர்!

இளையராஜா இடையில் கமர்ஷியல் பிரேக் கூட விடாமல் பிஸியாக இசையமைத்துக் கொண்டிருந்த 80-கள் அது. ஒரே வருடத்தில் 50 படங்களுக்கெல்லாம் இசையமைத்துக் கொண்டிருப்பார். ஒரு வருடத்தில் ஐந்து பாட்டு போடுவதற்குக் கூட இப்பொழுது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர்களின் ஞாபகம் நமக்கு வந்து போகும்.

பிஸியான இளையராஜாவுக்கு, எப்போதும் பிஸியாகவே பாடல் எழுதிக்கொண்டு இருந்தவர்கள் கவிஞர் வைரமுத்துவும், கவிஞர் வாலியும். அவரின் பெரும்பாலான பாடலுக்கு இவர்களே கவிஞர்களாக இருப்பார்கள். சில ஆண்டுகள் கழித்து, வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் பிரச்சனை, இப்ப வரைக்கும் என்னவென்று தெரியாத அந்த பிரச்சினைதான் வந்தது. அதன் பிறகு வாலியே அதிக பாடல்களை இளையராஜாவுக்கு எழுதினார்.

இதில்லாமல், இளையராஜா அப்போது நா. காமராசன், மு.மேத்தா, புலமைப்பித்தன் முத்துலிங்கம் போன்ற பாடல் ஆசிரியர்களையும் இடையிடையே பயன்படுத்திக் கொள்வார்.

எல்லா கவிஞர்களுக்கும் எப்பொழுதுமே ஒன்று மனசில் இருக்கும், தாம் தான் சிறந்த கவிஞர்கள் என்று. எல்லாருக்குமே ஏன் நம்மை அதிகமாக பாடல் எழுத பயன்படுத்த மாட்டார்கள் என்ற எண்ணமும் இருக்கும். ஆனால் அதற்காக கவிஞர்கள் எப்பொழுதுமே எந்த இசையமைப்பாளர்களிடம் சென்று நேரடியாகக் வலிந்து வாய்ப்பு கேட்பது கிடையாது. அதுதான் கவிஞர்களின் கலை செறுக்கு.

ஒரு கவிஞர் இளையராஜாவிடம் சென்று அவரைப் புகழ்ந்து பேசி, எனக்கும் வாய்ப்பு தாருங்கள் என்று எப்படி கேட்பது ? பெருமை வாய்ந்த ஒரு கவிஞனின் தன்மானம் அதற்கு இடம் கொடுக்குமா? ஒரு கவிஞன் இளையராஜாவிடம் சென்று, எனக்கு நன்றாக பாடல்கள் எழுத தெரியும், என் மனது முழுவதும் பாடல்கள் தான் இருக்கிறது. உங்களுக்கு உங்கள் மனது முழுவதும் இசை தான் இருக்கிறது. நீங்கள் பாடாத பாட்டும் இல்லை, நீங்கள் போடாத மெட்டும் இல்லை, நீங்கள் தான் இசை அரசன், நீங்கள் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள், உங்கள் பாடல்களில் எனக்கும் இடம் கொடுங்கள், உங்களை தான் நம்பியுள்ளேன் என்று சொல்லமுடியுமா? சொல்லவே முடியாது.

ஆனால் ஒரு கவிஞர் அப்படி சொன்னார், இளையராஜாவிடம் சொன்னார். ஆனால் நேராக சொல்லவில்லை. பின் எப்படி சொன்னார்? அவருக்கு எழுதிய ஒரு பாட்டில், இந்த வரிகளை சொன்னார். அந்தப் பாடல், தன் காதலனை நினைத்து ஒரு காதலி பாடுவது போன்ற பாடல்.

கவிஞர் முத்துலிங்கம் எழுதும் முதல் …

பாடல் வரிகள், காதலனுக்கு காதலி பாடுவது போலவும், இருக்க வேண்டும், அதே நேரத்தில் இளையராஜாவிடம் கவிஞர் வேண்டுகோள் விடுப்பது போலவும் இருக்க வேண்டும், இப்படி முழுப்பாடலையும் எழுதி முடித்தார். அந்த படம், 1989ல் வெளியான டி.பி கஜேந்திரன் இயக்கத்தில் வெளியான “பாண்டி நாட்டு தங்கம்” அந்தக் கவிஞர் முத்துலிங்கம். அந்த பாடல் “உன் மனசுல பாட்டுதான் இருக்குது” என்ற பாடல்.

அந்த பாடல் வரிகளை முழுவதும் படித்துப் பாருங்கள், அந்த வரிகளில், இரண்டே இரண்டு இடம் தான், ஒரு இடத்தில் பெண்ணென்று வரும், ஒரு இடத்தில் ராணி என்று வரும், அது மட்டும் தான் ஒரு காதலி பாடுவதுபோல் வரிகள் இருக்கும். மீதி எல்லாம் இளையராஜாவுக்கு முத்துலிங்கம் விடுத்த வரிகள் விடு தூது தான்.

இதில் எந்தவித தாழ்மையும் கிடையாது. அது ஒரு கவிஞனின் கவித்திறன் தான். இப்படித்தான் கவிஞர் கண்ணதாசனும் தன் சொந்த விஷயங்களை பட பாடல்களில் எழுதியுள்ளார். இப்பொழுது பாண்டி நாட்டு தங்கத்திலிருந்து அந்த பாடலின் வரிகளை மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள்.

இளையராஜாவிடம் முத்துலிங்கம் பேசுவது போல்.

உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது

என் மனசதை கேட்டுத் தான் தவிக்குது…

அதில் என்னை வச்சுப் பாட மாட்டியா

நெஞ்சத் தொட்டு ஆளும் ராசையா…

மனசு முழுதும் இசை தான் உனக்கு

அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு…

பாட்டாலே புள்ளி வச்சேன்

பார்வையிலே கிள்ளி வச்சேன்

பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே…

போடாத சங்கதிதான் போட ஓரு மேடை உண்டு

நாளு வச்சு சேர வாங்க ராசனே…

நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும்

நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் ஆளனும்…

சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து

தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நானா பூத்து…

நீ பாடும் ராகம் வந்து நிம்மதியை தந்ததையா

நேற்று வரை நெஞ்சில் ஆசை தோணலை…

பூவான பாட்டு இந்த பொண்ணத் தொட்டுப் போனதையா

போன வழி பார்த்த கண்ணு மூடலை…

உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி நான் ..

என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான் …

உங்களத் தான் எண்ணி எண்ணி என்னுசுரு வாழும்

சொல்லுமையா நல்லச்சொல்லு சொன்னா போதும்…

-ஜேம்ஸ் டேவிட்

இணையத்தில் இருந்து எடுத்தது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button