செய்திகள்

பொய்ச் செய்தி பரப்புவதும், கலவரத்தைத் தூண்டுவதும்தான் சனாதனம்

உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?

சனாதன ஒழிப்பு மாநாட்டில் நேற்று வாழ்த்துரை ஆற்றிய உதயநிதி ஸ்டாலின், “மாநாட்டின் தலைப்பே என்னைக் கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும்.

கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். அந்த வகையில், சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும்.

சனாதனம் அப்படிங்கிற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. சனாதனம், சமத்துவத்துக்கும் – சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது என அர்த்தம். அதாவது மாற்ற முடியாதது என்றும் சொல்லலாம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும், எதையும் கேள்வி கேட்க வேண்டும் என உருவானது தான் திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும்.

ராஜ்பவனில் இருந்து அடிக்கடி சனாதனம், சனாதனம் என்ற குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. நாம இந்த நிலையில இருக்கும்போது கூட, பள்ளிகளில் காலை உணவு போடுவதால், பள்ளியின் கழிவறை நிரம்பி வழிவதாக ஒரு செய்தித்தாளில் செய்தி வெளியிடுகிறார்கள்.

நம்முடைய முதலமைச்சர் , உடனே ட்விட்டர்ல ஒரு பதிவு போட்டார். நிலாவுக்கு சந்திரயானை ஏவும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படி செய்தி போடுகிறது என்றால், 100 ஆண்டுகளுக்கு முன்பு என்ன ஆட்டம் ஆடியிருக்கும் எனக் கேட்டார்.

இங்கே கூடி இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். தொடக்கத்தில் கலைகளும், எழுத்துகளும் சனாதனக் கருத்துகளை திணிக்கத்தான் பயன்படுத்தப்பட்டன. திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும் தோன்றிய பிறகுதான் கலையும், எழுத்தும் உழைக்கிற மக்களுக்கானதாக, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கானதாக மாறியது. அதற்கு முன்பு இங்கே ராமாயணமும், மகாபாரதமும் தான் மக்களுக்கு கலையாகவும், எழுத்தாகவும் சொல்லப்பட்டன.

பெண்களுக்கு சனாதனம் என்ன செய்தது. கணவனை இழந்த பெண்களை நெருப்பில் தள்ளி உடன்கட்டை ஏற வைத்தது. கைம்பெண்களுக்கு மொட்டையடித்து வெள்ளைப் புடவை உடுத்தே சொன்னது. குழந்தைத் திருமணங்களை நடத்த்தி வைத்தது. இதைத் தானே பெண்களுக்கு சனாதனம் செய்தது.

ஆனால், பெண்களுக்கு திராவிடம் என்ன செய்தது என்று நினைத்துப் பாருங்கள். பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்து பயணம், கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டம் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய்.

அண்ணா பிறந்த செப்டம்பர் 15 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் வீடுகளில் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப் போகிறது திராவிட மாடல் அரசு.

மக்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றுகிறது. ஆனால், ஒன்றிய அரசு நமது மக்களைப் பின்னோக்கித் தள்ளப் பார்க்கிறது. மணிப்பூர் மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பாஜக ஆளும் மாநிலம் அது. சொந்த மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி விட்டுள்ளார்கள். இதுதான் சனாதனம்.

பொய்ச் செய்தி பரப்புவதும், கலவரத்தைத் தூண்டுவதும்தான் சனாதனம். நம் ஊரில் வட மாநில தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று ஒரு பொய்யைப் பரப்பினார்கள். ஆனால், அதை நம்முடைய முதலமைச்சர் மிகச் சிறப்பாகக் கையாண்டார்.

பல்வேறு தொழில்களில் இருக்கும் கைவினைக் கலைஞர்களை ஊக்குவிப்பதாகச் சொல்லி ஒன்றிய அரசு விஸ்வகர்மா திட்டத்தைக் கொண்டு வருகிறது. ஆனால், அதில் ஒரு சதி இருக்கிறது. கைவினைக் கலைஞர்கள் குடும்பங்களில் இருக்கும் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கும் அந்தத் திட்டத்தில் பயிற்சி கொடுப்பதாகச் சொல்கிறார்கள்.

இதைத்தான் குலக்கல்வி திட்டம் என்று 1953ஆம் ஆண்டு ராஜகோபாலச்சாரியார் இங்கே கொண்டு வந்தார். தந்தை பெரியார் அந்தத் திட்டத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்களை அறிவித்தார். அதனால், ராஜகோபாலச்சாரியார் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும் நிலை வந்தது. பின்னர் முதலமைச்சரான காமராஜர் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். அந்த காமராஜரின் பெயரில் இருக்கும் அரசங்கத்தில்தான் இன்று இந்த மாநாடு நடக்கிறது.

இந்த காமராஜர் அரங்கத்தில் இருந்து உறுதியாகச் சொல்கிறோம். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா திட்டத்தை தி.மு.க கடுமையாக எதிர்க்கும். எப்படி குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்த ராஜாஜி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினாரோ, அதேபோல் இந்த விஸ்வகர்மா திட்டத்தைக் கொண்டு வந்திருக்கும் நரேந்திர மோதி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும்,” என்று பேசியிருந்தார்.

நன்றி: பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button