சினிமா

“உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே.’’

நான் என் அலுவலகத்தில் நாகேஷ் சாரின் புகைப்படம் மட்டுமே வைத்திருப்பேன். ஒருமுறை, ‘இதென்ன நீ இவன் போட்டோவை மட்டும் வெச்சிருக்க’ என்றார் வாலி சார். ஏதோ வையப்போகிறாரோ என்று நினைத்து, “இல்லண்ணே, ரொம்பப் பிடிக்கும்’’ என்றேன். “இருக்காதா பின்ன. இல்ல… உனக்கு இவனை அவ்வளவு நல்லா தெரியுமா என்பதற்காகக் கேட்டேன்’’ என்றார். “உங்களவுக்குத் தெரியாதுண்ணே’’ என்றேன். “ஆமாம். அந்தளவுக்குத் தெரியும்னு சொன்னா உனக்கும் எனக்கும் தகராறாயிடும்’’ என்று சொல்லிவிட்டு “அவன் சாமான்யமான கலைஞன் இல்லடா. கேரம் போர்டுனா அடுத்தடுத்து எல்லாக் காயின்களையும் பத்து நிமிஷத்துல போட்டுட்டு ஸ்ட்ரைக்கரைக் கையில கொடுத்துட்டுப் போயிடுவான். பாட்மின்டனும் அப்படி விளையாடுவான். நல்லவேளை, கவிதை எழுத நான் உற்சாகப் படுத்தலை. இல்லைனா அதையும் எழுதிச் தொலைச்சிருப்பான். அவனென்ன, டான்ஸ் கத்துக்கிட்டானா? ஒண்ணும் கிடையாது, போவான், என்னமோ படிப்பான். அவன் விருப்பப்பட்டான்னா அது அவனுக்கு வரும். அவன் சரஸ்வதி’’ என்றார்.

பிறகு அதை நாகேஷிடம் சொல்லி, ‘`உங்களை என்ன அவர் அப்படித் தூக்குறார்?’’ என்றேன். “சும்மாடா. ரெண்டு பேரும் ஒரே டீயை மாத்தி மாத்திக் குடிச்சிட்டுக் கிடந்தோம். அந்த அன்புல ஏதோ பேசுறான். அதையெல்லாம் நம்பிடாத’’ என்றார். அப்படி ஆரம்பகாலங்களில் ஒரே டீயைக் குடித்துக் கொண்டிருந்தவர்களே வளர்ந்த பின்னர் பகையாளிகளாக நிற்பார்கள். ஆனால், அதே அன்போடு இருப்பதற்கு எப்படிப்பட்ட மனம் வேண்டும் என்பதற்கு இவர்களே ஆகச்சிறந்த உதாரணங்கள்.

வாலி சாரை என்ன வார்த்தைகளில் பாராட்டினாலும் அது அவரின் உயரத்துக்கும் குணத்துக்கும் குறைவு. ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்துக்காக ஒரு பாடல் எழுதினார். படித்தேன். இயக்குநரான சிங்கீதம் சாரிடம் “இது நல்லா இல்லைனு அவர்ட்ட சொல்ற தைரியம் எனக்குக் கிடையாது. நீங்க சொல்றமாதிரி சொல்லி வேற எழுதி வாங்குங்க’’ என்றேன். அவர் சொன்னதும், வாலி சார் வேறொன்றை எழுதிக் கொடுத்தார். என்னதான் இருந்தாலும் சிங்கீதம் சார், தெலுங்குதானே. “இன்னொண்ணு எழுதித் தந்திருக்கார். ஓகேவா இது’’ என்றார். கவிதையாக நன்றாக இருந்தது. ஆனால், அந்த சிச்சுவேஷனுக்கான பாட்டாக வரும்போது ஏதோ ஒரு விஷயம் குறைந்ததாக நினைத்தேன். ” ‘எனக்குத் தமிழ் தெரியலை. கமல்கிட்ட கேட்டுக்கங்க’னு சொல்லிடுங்க” என்றேன்.

அப்போது நான் ஹேமமாலினி அம்மாவின் வீட்டில் தங்கியிருந்தேன். வாலி சார் விறுவிறுவென வீட்டுக்கே வந்துட்டார். “ஏன்டா நீயும் டைரக்டரும் என்னை என்னடா நினைச்சுட்டிருக்கீங்க. நான் வாலியா, வாலி பாலா? ரெண்டு பேரும் அங்கயும் இங்கயும் மாறிமாறி எத்துறீங்க. உங்களுக்கு என்னதான்டா வேணும். நான் கடா கடாங்கிறேன். நீ ஒழக்கப் பால், ஒழக்கப்பால்ங்கறே… என்னதான்டா எதிர்பார்க்குற’’ என்றார். “இல்லண்ணா, எனக்கு வேணும்…’’ என்று தயங்கினேன். `‘என்ன தளை சரியில்லைங்கிறியா, சீர் சரியில்லைங்கிறியா?’’ என்றார் செல்லக் கோபத்துடன். அவரின் அந்தக் கோபம் எனக்கு எப்போதும் பிடிக்கும். ஏனெனில், அது தமிழ்க்கோபம்.

“அதெல்லாம் பேசலை. நீங்க கடாவா இருந்தா என்ன, எரும மாடா இருந்தா என்ன? எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. எனக்கு முட்டுது. எனக்குத் தெரியும். நான் உங்கள்ட்ட அதுக்கு முன்ன இதே இடத்தில் இருந்து நிறைய வாங்கியிருக்கேன். இந்தக் கடையில் அது ஸ்டாக் இல்லைனா நம்பமாட்டேன். எப்ப ஸ்டாக் வரும்னு கேட்பேனே தவிர, வேற கடைக்குப் போகமாட்டேன்’’ என்றேன். சிரித்தவர், “கண்ணதாசனா இருந்தா இப்படியெல்லாம் தொந்தரவு பண்ணுவியா?’’ என்றார். “அவரையும் பண்ணியிருக்கேனே’’ என்றேன். “இப்படிச் சொல்லிக்காட்டினா, நான் மசிஞ்சிருவேன்னு நினைக்கிற’’ என்றவர், “சரி சரி… உனக்கு இதுல என்ன குறை’’ என்றார். “இல்லண்ணா, மறக்க முடியாத பாட்டா வரவேணாமா? நீங்க எழுதி சாதாரண சோகப்பாட்டா வந்தா போதுமா’’ என்றேன். அதன்பிறகு அவர் எழுதித்தந்ததுதான் “உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே.’’

பிறகு அந்தப் பாட்டுக்கு விருதுகள் பல வந்தன. அதையும் சொல்லிக் காட்டியவர், “கோவிச்சுண்டு எழுதாம இருந்திருக்கலாம். ஆனால், அவார்டு கிடைக்காமல் போயிருக்கும். ஆனால் அவார்டை வெச்சுண்டு நாக்கா வழிக்க முடியும்? பணம் கொடுத்த, அதுவும் மூணுவாட்டி எழுதினதுக்கும் பணம் கொடுத்துட்ட’’ என்றார். எப்போதாவது அவரின் பாடல்களில் நான் சில வரிகளை மாற்றுவேன். ராஜா சில வரிகளை மாற்றுவார். அப்படி ஒருமுறை நாங்கள் இருவரும் மாற்றியபோது, “அப்பா டேய், நீங்க ரெண்டு பேரும் செல்ஃப் ஷேவிங்னு முடிவு பண்ணிட்டீங்க. அப்புறம் என்னை எதுக்குடா பொட்டியைத் தூக்கிட்டு வரச்சொன்னீங்க’’ என்றார். இப்படி போகிற போக்கில் சிந்திச் சிதறும் அவரின் அனுபவங்கள், கவிதைகளைவிட பிரமாதமாக இருக்கும்.

– கமலஹாசன்

நன்றி: நவீனன் yari.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button