கோவை அருகே இப்படி ஓர் இடமா? – தொங்குபாலம் முதல் போட்டிங் வரை… அட்டகாசமான ஸ்பாட்

கோவையில் இருந்து பாலக்காடு வழியில் பயணித்தால் இரண்டரை மணி நேர பயணத்தில் நெல்லியம்பதியை அடையலாம்.
கோயம்பத்தூர் நகர மக்கள் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ஊட்டி, என்று சுற்றி உள்ள இடங்களை பார்த்து போர் அடித்து விட்டது. கோயம்பத்தூரில் இருந்து அருகில் வேறு ஏதாவது சுவாரசியமான இடங்கள் இருக்கிறதா என்று தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்… உங்களுக்கான அருமையான இடம் பற்றிதான் இங்கு பார்க்கப்போகிறோம்.
கோவை என்பது தமிழக கேரளா எல்லை கொண்ட ஒரு மாவட்டம். அதோடு அழகு கொஞ்சும் மலை அடுக்குகளை கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைகள்தான் இரண்டு மாநிலங்களையும் பிரிக்கின்றன. ஆனால் இந்த மலைகளுக்கு நடுவே பாலக்காடு இணைக்கும் கணவாய் ஒன்று அமைந்துள்ளது. பாலக்காட்டுக் கணவாயின் தெற்கே அமைந்துள்ள மலைப் பகுதிதான் நெல்லியம்பதி. இது தான் வந்த அட்டகாசமான ஸ்பாட்.
கோவையில் இருந்து பாலக்காடு வழியில் பயணித்தால் இரண்டரை மணி நேர பயணத்தில் நெல்லியம்பதியை அடையலாம். பச்சை கம்பளம் விரித்தது போல இருக்கும் நெல் வயல்களும், தென்னை மரங்களும் நிரம்பிய பகுதிகளை கடந்து, நென்மாராவில் இருந்து போத்துண்டி அணை சாலையில் பயணிக்க வேண்டும்.
போத்துண்டி அணை 19 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பழமையான அணைகளில் ஒன்று. இந்த அணையில் சுற்றுப்பயணிகளுக்காக பூங்கா, படகு சவாரி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த அணையை கடந்தால் வனத்துறை சோதனைச்சாவடி வரும். இந்த சித்தனை சாவடியில் நமது முழு விபரங்களை கொடுத்தல் மட்டுமே உள்ளே அனுமதிப்பார்கள். வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக மாலை 4 மணிக்கு மேல் அச்சாலையில் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அழகான இந்த மலைப்பாதையில் இருந்து பாலக்காட்டின் அழகை பார்க்கலாம். இங்குள்ள வியூ பாயிண்டுகளில் (view point) நின்று மலையின் அழகோடு படங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதன் பின்னர் பயணத்தை தொடர்ந்தால் தேயிலை, காப்பித் தோட்டங்கள் மற்றும் அதை சுற்றி நடமாடும் யானைகளை பார்க்கலாம். அதை கடந்து போனால் நெல்லியம்பதி நீர்வீழ்ச்சி இருக்கும். அதையும் பார்த்து விட்டு போனால் அடுத்து ஒரு வியூ பாயிண்டு இருக்கும்.
சீதார்குண்டு காட்சி முனை முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது.மலை உச்சியை ஒட்டிச் செல்லும் ஒற்றையடி பாதை நடப்பது திரில்லாக இருக்கும். சற்று தூரம் நடந்தால் 100 மீட்டர் உயரமுள்ள சீதார் குண்டு நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்கலாம். இந்த இடத்திற்கே பிரபலமான கூஸ்பெர்ரி மரங்கள் கண்டு ரசிக்கலாம்.
அங்கிருந்து தேயிலைத் தோட்டங்கள் வழியாக சென்றால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காரப்பாரா தொங்குப்பாலத்தை அடையலாம். அதை ஒட்டி காரப்பாரா அருவியும் உள்ளது. அழகான இந்த காட்சியை காண்பது மட்டுமல்லாமல் மாலை நேரத்தில் இந்த காடுகளின் இடையே மிளிரும் ஆயிரக்காண மின்மினி பூச்சிகள் உங்கள் கண்களை கொள்ளையடித்து விடும். அதே போல இந்த மலை படுதிகளில் ஜீப் சவாரி வசதியும் உள்ளது. இதன் மூலம் மலை காடுகளுக்குள் சென்று காட்டு விலங்குகளை பார்க்கும் வாய்ப்பும் உள்ளது.

கோயம்புத்தூர் வாசிகள் மட்டுமின்றி ட்ரெக்கிங் மற்றும் மலை பிரதேசத்திற்கு போக விரும்பும் யாரும் இந்த வார இறுதிக்கு நெல்லியம்பதி ட்ரிப்புக்கு பிளான் போடலாம். நிச்சயம் உங்களுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை இந்த இடம் கொடுக்கும்.