எல்லாம் ஒரு நம்பிக்கையில்தான். நான் நம்புகிறேன், என்றென்றும் இறுதியில் அறமே வெல்லும்!’

மேன்ஷன் வாழ்வு உங்களது தனிப்பட்ட வாழ்வில், இலக்கியத்தில் என்னவாக பங்காற்றியிருக்கிறது? முழுவதுமாக இந்த மாதிரியான வாழ்வில் உடன்படுகிறீர்களா?’’
“கடந்த 36 வருடங்களாகவே நான் தனியன்தான். இன்றும் தொடர்கிறது என் மேன்ஷன் வாழ்க்கை. தனிமையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அது என்மேல் திணிக்கப்பட்டது. உறவுகளுக்குள், நட்புகளுக்குள் இருந்து, சில பொழுதுகளை, நாட்களை நான் தேர்வுசெய்து தனிமைப் படுத்திக்கொள்ளும் போது மட்டுமே தனிமை, இனிமை; அல்லாவிடில் அது துயரம். என் கதைகளை ஆய்வுசெய்த ஒரு மாணவர், என் பாத்திரங்கள் `முதல் வரியில் தெருவில் இறங்குகிறார்கள்; அலைகிறார்கள். பிறகு தன் தனிக்கூட்டுக்குள் புகுகிறார்கள்’ என்று எழுதினார். அது சரியாக இருக்கும்.
தனியாக இருப்பது பயம் தருவதாக இருக்கிறது. உறக்கம் கலைப்பதாக இருக்கிறது. நானும் நானும் மட்டுமே என் வாழ்க்கை. நான் மகிழ்ச்சியாக இல்லை. ஆனாலும், வாழ்ந்தே தீரணும் வாழ்க்கை. கொடுத்தே தீரணும் கடன்.
உணவு விடுதிகளில், இயந்திரங்களில் உருவான சோப்பு டப்பாக்களைப்போல, பலகார, உணவுப் பட்டியல் வெறுப்பைத் தருகிறது. இட்லி, வடை, பொங்கல், பூரி, தோசை என எத்தனை ஆண்டுகள் தின்பது? அறுபது எழுபது ஆண்டுகள் காலைப் பலகாரமாக இட்லி தின்கிற இனம். மகத்தான கண்டுபிடிப்புகளை, படைப்புகளைத் தரும் சாத்தியம் குறைவு. ஐரோப்பிய எழுத்தாளர்கள் பயணங்கள் மூலமே இந்தச் சோர்வை வெல்கிறார்கள்.’’
“உங்களது குடும்பம், மனைவி குறித்து நினைவுகூர விரும்பும் விஷயம்?’’
“என் மனைவி 2011-ம் ஆண்டில் காலமாகும்போது, நான் கனடாவில் இருந்தேன். குழந்தைகள் பிரான்ஸில் இருந்தார்கள். அடக்கம் செய்யவே நாங்கள் ஒன்று சேர்ந்தோம். 72 ஆண்டுகள் நான் வாழ்ந்தமைக்குக் காரணம், என் மனைவி வாழ்ந்தார் என்பது மட்டும்தான். குடும்பம் எப்படி நடந்தது; குழந்தைகள் எப்படி வளர்ந்தார்கள் என்பதுகூட எனக்குத் தெரியாது. மிகுந்த குற்றவுணர்வில் நான் தள்ளப்பட்டு விட்டேன்.’’
“அற மதிப்பீடுகள் குறைந்துவரும் இந்தச் சூழலை எப்படி உணர்கிறீர்கள்?’’
“இன்னும் அம்மாக்கள் குழந்தைகளுக்கு அம்மாக்களாகத்தான் இருக்கிறார்கள். தங்கைக்காக தனது வாழ்வை அர்ப்பணிக்கிற அண்ணன்கள் இருக்கிறார்கள். குடித்துவிட்டு கழுத்தை நெரிக்கும் கணவன்களோடு மனைவிகள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறம் சார்ந்த புதிய நம்பிக்கைகளை நாம்தான் விதைக்க வேண்டும். வேறு யார் செய்வார்கள்? இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது. யுத்த பூமியான ஈழத்தில்கூட பூக்கள் பூக்கத்தானே செய்கின்றன. எல்லாம் ஒரு நம்பிக்கையில்தான். நான் நம்புகிறேன், என்றென்றும் இறுதியில் அறமே வெல்லும்!’’
-பிரபஞ்சன் நேர்காணல்
நன்றி: விகடன் தடம்