இந்தியாவில் முதன்முதலில் ‘மகாத்மா’என்று அழைக்கப்பட்ட ஜோதிராவ் பூலே (Jyotirao Phule) யின் பிறந்த நாள் இன்று

இந்தியாவில் முதன்முதலில் ‘மகாத்மா’என்று அழைக்கப்பட்ட ஜோதிராவ் பூலே (Jyotirao Phule) யின் பிறந்த நாள் இன்று.
ஜோதிராவ் பூலே அவர்கள் 1827 ஆம் ஆண்டில் மகாராட்டிரத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் உள்ள லால்கன் என்னும் கிராமத்தில் பிறந்தவர். மராட்டியத்தின் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவுகளில் ஒன்றான மாலி என்ற பிரிவைச் சேர்ந்தவர்.இளமைப் பருவம் தொட்டே அவருக்கு சீர்திருத்த எண்ணங்கள் முளைவிடத் தொடங்கியது.அதற்குக் காரணம், சிறுவயதில் அவர் இருந்தபோது ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைகளால் அவர் குடும்பமும், அவரும் பட்ட இன்னல்கள் பின்னாளில் அவரை ஓர் சமூகப் புரட்சியாளராக மாற்றியது.
பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் கல்வி பெறுவதன் மூலமே சமூகத்தில் உயர்நிலை எய்த முடியும் என உறுதியாக நம்பினார். எனவே, மிகவும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை 1848 ஆம் ஆண்டில் முதன்முதலாகத் தொடங்கினார். அப்பள்ளியில் தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்ட மகார்,மாங் போன்ற பிரிவுப் பெண்களுக்கு முன்னுரிமை தந்தார். எனினும், உயர்சாதியினரின் மிரட்டல்களால் அப்பள்ளிக்கு ஆசிரியர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டபோது, தன் மனைவி சாவித்திரிக்குக் கல்வி புகட்டி அவரை அப்பள்ளியின் ஆசிரியராக்கினார்.
பெண்கள்,ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரின் நலன் காக்கவும்,அவர்களின் நிலை உயரவும் பள்ளிகளைத் தொடங்கி அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட பூலே 1873 செப்டம்பர் 24 அன்று சத்ய சோதக் சமாஜ் (உண்மை தேடுவோர் சங்கம்) என்னும் சங்கத்தைத் தொடங்கினார்.இச்சங்கம் தொடங்கப்பட்டதற்குப் பிறகு, கல்வியைப் பரப்பல், விதவைத் திருமணத்தை ஊக்குவித்தல், புரோகித ஒழிப்புத் திருமணங்களை நடத்தல், சமூக ஏற்றத் தாழ்வுகளைப் போக்கல், உழவுத் தொழிலை மேம்படுத்தல் ஆகிய சமூகப் பொருளியல் காரணங்களுக்காகப் பாடுபட்ட இவ்வமைப்பே இந்திய மண்ணில் சமூக நீதிக்கான போராட்டத்தைத் தொடங்கி முன்னெடுத்துச் சென்றது.
பூலேயை வழிகாட்டியாய்க் கொண்டு கொள்கை முழக்கம் செய்தவர் தான் அம்பேத்கர் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாறு பல சமயங்களில் உன்னதப் பதிவுகளைத் தவறவிட்டிருப்பதற்கு மகாத்மா ஜோதிராவ் பூலே ஒரு சிறந்த உதாரணம். வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் பூலே போன்ற சமூக நீதிப் போராளிகள் புறக்கணிக்கப் படுகிறார்கள்