உலகம் உன்னுடையது

உலகம் உன்னுடையது
*
மனிதரில் நீயுமோர் மனிதன்; மண்ணன்று!
இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!
தோளை உயர்த்துச்
மீசையை முறுக்கி மேலே ஏற்று!
விழித்த விழியில் மேதினிக் கொளி செய்!
நகைப்பை முழக்கு!
நடத்து லோகத்தை!
உன்வீடு – உனது பக்கத்தின் வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகள் இடையில் திரையை விலக்கி
நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்
ஏறு விடாமல்; ஏறு மேன்மேல்!
ஏறி நின்று பாரடா எங்கும்;
எங்கும் பாரடா இப்புவி மக்களைப்!
பாரடா உன் மானிடப் பரப்பை!
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
‘என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்களட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்! உன்னைச் சங்கமமாக்கு;
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை; எங்கும் பேதமில்லை
உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்!
புகல்வேன்; ‘உடைமை மக்களுக்குப் பொது’
புவியை நடத்துப் பொதுவில் நடத்து!
*
– பாவேந்தர் பாரதிதாசன்
*
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளில் அவரது கவிதைகளின் ஒளியில் அவரைக் காட்டிய புதிய உலகைக் காண்போம்
*
பிருந்தா சாரதி
*
