மாக்சிம் கார்க்கி பிறந்த தினமின்று

மாக்சிம் கார்க்கி பிறந்த தினமின்று
ஒரு பிரபல ரஷ்ய எழுத்தாளர். அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் இதுதான் இவரது உண்மையான பெயர் .. இவர் மார்ச் 28, 1868-ல் பிறந்தார். அவர் எழுதிய `தாய்’ என்ற காவியத்தால் அதிகம் அறியப்பட்டவர். எழுத்தாளர்களுக்கும் எழுத விரும்புபவர்களுக்கும் அவர் வாழ்விலிருந்து பெற வேண்டிய பாடங்கள் சில உண்டு.
கையில் எந்த நேரமும் குறிப்பேடு வைத்துக்கொண்டு தனக்கும் தோன்றுவதை அதில் எழுதி வைத்துக்கொண்டார். 1892ம் ஆண்டு இவரது முதல் சிறுகதையான மகர் சுக்ரா வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற புனைப்பெயரில் தொடர்ந்து எழுதி வந்தார். கார்க்கி என்ற சொல்லுக்கு கசப்பு என்று பெயர். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களை கிளர்த்தெழச்செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவையே இவரது எழுத்தின் அடிநாதமாக இருந்தது.
உலகின் மிகச்சிறந்த புதினங்களில் ஒன்றான தாய் என்ற புதினத்தை எழுதியவர். அந்தப் புதினம் ரஷ்யாவின் கம்யூனிச புரட்சியில் பங்கேற்கும் இளைஞர்களைக்கொண்ட தொழிற்சாலையை கதைக்களமாகவும் கொண்ட புதினம்.
உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புதினம் மட்டுமின்றி திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. அதிகம் விமர்சிக்கப்பட்ட நாவலாகவும் இருந்தது. இவர் 5 முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இவர் கிட்டத்தட்ட ரஷ்ய முழுவதும் பயணம் செய்துள்ளார். அந்த அனுபங்களே பிற்காலத்தில் அவரது எழுத்தில் பிரதிபலித்தது. அதுவே அவரது எழுத்தை உலகெங்கும் கொண்டு செல்வதற்கு உதவியது.
கார்க்கி துவக்க காலத்தில் எழுதிய சிறுகதைகள், நாடகம், கவிதை, நாவல்கள் என அனைத்தும் புகழ்பெற்றவை. மாக்சிம் கார்க்கி ரஷ்யாவில் உள்ள நிஜினி நவ்கரோட் என்ற ஊரில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் 1868ம் ஆண்டு பிறந்தார். இவரது 5 வயதில் தந்தையை இழந்தார். 11வது வயதில் தாயும் காலமானார். இவர் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். வறுமையால் பள்ளி செல்ல முடியாத இவர், 8 வயது முதல் வேலைக்குச் சென்றார். வேலை செய்துகொண்டு தானாவே முயன்று ரஷ்யா, பிரெஞ்ச், இத்தாலி, ஆங்கிலம், ஜெர்மனி ஆகிய மொழிகளை கற்றார்.
வறுமையும், காலமும் அவரை பல்வேறு பணிகளை செய்ய வைத்தது. காலணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். அடுத்ததாக கட்டிட வேலை பின்னர் கப்பலில் வேலை என்று பல வேலைகளை செய்துள்ளார். இதனால் இவர் ரஷ்யா முழுவதும் பயணிக்கும் வாய்ப்பையும் பெற்றார். இந்த பயண அனுபவங்களே பிற்காலத்தில் அவர் எழுத்தை செழுமையாக்கின
இவரது இலக்கியத்தின் தாக்கம் உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்களின் எழுத்தில் பிரதிபலித்தது. சோஷியலிச எதார்த்த இலக்கியத்தின் பிதாமகரும், பல அமர இலக்கியங்களைப்படைத்தவருமான மாக்சிம் கார்க்கி சமூகத்தின் தாக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாத குழந்தை மனம் கொண்டவராக இருந்தார். அதனால் தற்கொலைக்கு முயன்ற அவர் பிழைத்தார். ஆனால் தனது 68 வயதில் 1936ம் ஆண்டு மறைந்தார்.