இளையராஜாவின் இசையில் பாடல் எழுதிய கவிஞர்களின் எண்ணிக்கை 90 இருக்கலாம்.

இளையராஜா தன் இசையில் தானே 100 பாடல்கள் வரை எழுதியுள்ளார். அவரையும் சேர்த்து இளையராஜாவின் இசையில் பாடல் எழுதிய கவிஞர்களின் எண்ணிக்கை 90 இருக்கலாம்.
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படுகிற எண்ணிக்கை யாவும் வெளிவந்த தமிழ்ப் படங்களிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் தொகை மட்டுமே. பூஜை மற்றும் பாடல் பதிவு, பாடல் பதிவு மற்றும் பகுதி படமாக்கல், முழுப் படப்பிடிப்பு முடிந்து வெளிவராத படங்கள், டப்பிங் படங்கள் என எல்லாவற்றையும் சேர்க்கையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவே செய்யும்.
இளையராஜா கவிஞர், பாடகர் என யாரோடும் முழுவதுமான தொழிற்பிணைப்பில் இருந்திடவில்லை. தன் முதற்படம் தொட்டே பாடுவதற்கும் எழுதுவதற்கும் அந்தந்தக் காலகட்டத்தில் பேரோடு விளங்குகிற எல்லோருடனும் இணைந்து பணியாற்றுகிற சந்தர்ப்பங்களை மாற்றி மாற்றி உருவாக்கிய வண்ணமே தன் சமீபத்திய படமான சைக்கோ வரை பின்பற்றி வந்திருப்பவர் இளையராஜா. அவரது இசையமைப்பில் வாலி(91), கங்கை அமரன் (31), பஞ்சு அருணாச்சலம் (20), வைரமுத்து (16), கண்ணதாசன்(11), பழநிபாரதி (8), ஆர்.வி.உதயகுமார் (7), புலமைப்பித்தன் (6), கஸ்தூரி ராஜா (5) ஆகியோர் படங்களில் எல்லாப் பாடல்களையும் எழுதுகிற வாய்ப்பு கிடைக்கப் பெற்றனர். மு.மேத்தா, நா.முத்துக்குமார் ஆகிய இருவரும் இரண்டு படங்களில் எல்லாப் பாடல்களையும் எழுதியுள்ளனர். அகத்தியன், பா.விஜய், சினேகன், ஜீவன், பிறைசூடன், எம்ஜி.வல்லபன், புரட்சிதாசன், காமகோடியன், நா.காமராசன், அறிவுமதி ஆகிய 10 பேரும் தலா ஒரு படத்தில் எல்லாப் பாடல்களையும் எழுதினர். மேற்சொன்ன 21 பேர்களும் சேர்த்து மொத்தம் 193 படங்களில் அனைத்துப் பாடல்களையும் புனைந்துள்ளனர்.
ஆண்டாள், பாரதியார், பாரதிதாசன், ராமலிங்க அடிகளார், சிவகாமசுந்தரி, கோபாலகிருஷ்ண பாரதியார், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர், தியாகராஜ சுவாமிகள், பாவலர் வரதராஜன் போன்ற கடந்த காலத்தின் பாடல்கள் திரைப்படங்களில் இடம்பெறுவது வழக்கம். அந்த வரிசையில் அவற்றுக்கு ராஜாவும் இசையளித்திருக்கிறார். அரசியல், கலை- இலக்கியவாதிகளின் திரைப்படப் பங்கேற்புகளில் மு.கருணாநிதி, ஜெயகாந்தன், வலம்புரி ஜான், கா.காளிமுத்து, பாடகி எஸ்.ஜானகி (கண்ணா நீ எங்கே – ருசி கண்ட பூனை) போன்ற ஆளுமைகள் இளையராஜா இசையில் பாட்டெழுதியிருக்கிறார்கள்.
- ஆத்மார்த்தி
நன்றி: தமிழினி