சினிமா

தி கேரளா ஸ்டோரி’ படத்தை எதற்காக தடை செய்ய வேண்டும்?

தி கேரளா ஸ்டோரி’ படத்தை எதற்காக தடை செய்ய வேண்டும்?

‘தி கேரளா ஸ்டோரி’, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, பிபிசி நிறுவனம் தயாரித்த ‘இந்தியா: தி மோடி குவஷ்ட்டின்’ போன்ற எந்த படத்தையுமே தடை செய்ய தேவையில்லை என்பது எனது கருத்து.

முன்பை காட்டிலும் கருத்து சுதந்திரத்துக்கான வெளி அகல விரிந்திருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு சிலரின் கைகளில் மட்டுமே ஊடகம் இருந்தது என்கிற சூழலிலிருந்து சமூக ஊடகங்களின் வாயிலாக அதிகார பரவல் நிகழ்ந்துள்ளது. இது பாரம்பரிய ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் ஒருவிதமாக அச்சுறுத்தலை ஏற்படுத்தவே செய்திருக்கிறது.

ஒரு காலத்தில் opinion makers ஆக news makers-தான் இருந்தார்கள். இன்று சமூக ஊடக பயனாளர்களும், சமூக ஊடகவியலாளர்களும் அந்த இடத்திற்கு promote ஆகி இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ஒரு சமூக அவலம் நிகழ்ந்துவிடுகிறது. அது குறித்த செய்தி பாரம்பரிய ஊடகங்களின் கவனத்துக்கு வருகிறது. ஆனால், அக மற்றும்/அல்லது புறக் காரணங்களால் அந்த செய்தியை பிரசுரிக்கவோ, ஒளிபரப்பவோ வேண்டாம் என்று பாரம்பரிய ஊடகங்கள் முடிவெடுக்கின்றன. இதற்கிடையில் அந்த சமூக அவலத்தை தனது அலைபேசி மூலம் வீடியோ படம் பிடித்து யாரோ ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிவிடுகிறார். இதன் வழியாக அந்த சிக்கல் சார்ந்து பொதுமக்களின் கவனம் குவிகிறது. அந்த வீடியோ பதிவு வைரலாகும் பட்சத்தில் அதுவரை அந்த செய்தியை வெளியிட வேண்டாம் என்று முடிவெடுத்த பாரம்பரிய ஊடகங்கள் தற்போது அதை வெளியிடும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றன.

இப்படியாக கருத்துலகில் புழங்குபவர்கள் தங்கள் கைகளில் இறுகப்பற்றி இருக்கும் எதேச்சதிகாரத்தை ஜனநாயகப்படுத்தி வருகிறது பொதுமக்கள் வசமுள்ள சமூக ஊடகம்.

இப்படி கருத்துருவாக்கம் நிகழும் களமாக சமூக ஊடகம் உருபெற்றிருப்பதை கவனிக்கும் அதேவேளையில் உண்மையான கருத்துப் பரிமாற்றமோ, உரையாடலோ இன்று பொதுவெளியில் நிகழ்வதற்கான இடைவெளி சுருங்கிக் கொண்டே வருவதாகவும் தோன்றுகிறது.

1900களின் ஆரம்பத்திலிருந்து மத்திய காலம் வரை தமிழில் வெளிவந்த நாளிதழ்களையும், பத்திரிகைகளையும் வாசிக்கும்போது மாற்று கருத்துகளுக்கோ, வெளிப்படைத்தன்மைக்கோ, கருத்து பரிமாற்றத்துக்கோ அன்று இருந்த இடம் இன்று பாரம்பரிய ஊடகங்களிலும் இல்லை சமூக ஊடகங்களிலும் இல்லை என்பது பட்டவர்த்தனமாகிறது. குறிப்பாக, இ.வெ.ராமசாமி பெரியார் நடத்தி வந்த ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’, ‘குடிஅரசு’ பத்திரிகைகள் அலசிய கருத்தாக்கங்களையும், பிரசுரித்த செய்திகளையும், வெளியிட்ட செய்தி கட்டுரைகளையும், மாற்றுக் கருத்துக்கு இடமளித்த பாங்கையும் புரட்டிப் பார்க்கும்போது இன்று நாம் எவ்வளவு தூரம் பிற்போக்காகி விட்டோம் என்கிற ஆதங்கம் உண்டாகிறது.

இன்று பெரியார் உயிருடன் இருந்திருந்தால், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் உட்கருத்தைத் தீவிர விவாதத்துக்கு உட்படுத்தி இருப்பாரே ஒழிய தடை செய்யும் வாதத்தை தூக்கி நிறுத்திருக்க மாட்டார். தடை மடைமாற்ற மட்டுமே உதவும். தீர்வளிக்காது. கல்வியில் முன்னேறிய மாநிலங்களாகத் திகழும் தமிழ்நாடும், கேரளாவும் கலை வடிவங்களைத் தடை செய்யும் வாதத்துக்குத் துணை போகக் கூடாது. எதுவாயினும் பார்வைக்கும், வாசிப்புக்கும், திறனாய்வுக்கும் உட்படுத்த வேண்டும்.

Susithra Maheswaran

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button