
R P ராஜநாயஹம்
கவி கா.மு.ஷெரிப்
மந்திரி குமாரிபடத்தில் எஸ்.ஏ.நடராஜன் மலைமேலே மாதுரி தேவியிடம் பாடும் பாடல் “வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்” -திருச்சி லோகநாதன் குரல் கொடுத்த பாட்டு!இந்த பாடலை எழுதியவர் கவி கா.மு.ஷெரிப் .
‘டவுன் பஸ் ‘ படத்தில் கண்ணப்பா -அஞ்சலிதேவி வாயசைத்து நடித்த “பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமோ ? துயரம் நிலை தானா ? உலகம் இது தானா ?” பாடலை எழுதியவரும் கவி கா.மு.ஷெரிப் தான்.
எஸ்.எஸ்.ஆர் நடித்த பாடல்கள் “ஏரிக்கரை மேலே போறவளே பொன்மயிலே! என்னருமை காதலியே என்னைக்கொஞ்சம் பாரு நீயே ” ” பணம் பந்தியிலே ! குணம் குப்பையிலே ! இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதன் இல்லே !” – எழுதியவர் கா.மு.ஷெரிப் . சிவாஜி கணேசனுக்கு கா.மு.ஷெரிப் எழுதிய பாடல்கள்
“வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் -வையகம் இது தானடா “
” பாட்டும் நானே ! பாவமும் நானே !”
சினிமாப்பாடல் எழுதியவர் தான் என்றாலும் இவர் ஒரு Man of principles.
யாராவது கொஞ்சம் பெரிய மனுஷன் பழக்கம் இருந்தா அதை வைத்து எப்படி Exploit பண்ணலாம்னு தவிக்கிற உலகம் இது. மந்திரிகுமாரி படத்தினால் கருணாநிதி, எம்ஜியார், பாட்டெழுதிய ஷெரிப் …எவ்வளவு காலப்பழக்கம்!
ஒரு முறை கருணாநிதி முதல்வராய் இருந்த போது கவி கா .மு .ஷெரிப்பின் மனைவி பார்க்கப் போயிருந்தார் . B.E. படித்த தங்கள் மகனுக்கு, அப்போது வேலையில்லாததால் கோபாலபுரத்திற்கு போயிருக்கிறார். கருணாநிதி அன்போடு வரவேற்று உபசரித்திருக்கிறார் . மகனுக்கு வேலை வேண்டும் என்று கேட்ட தாயைப் பார்த்து சொன்னாராம் : ” நான் சிபாரிசு பன்றதை கவிஞர் விரும்பவே மாட்டார் . சிபாரிசு செஞ்சா ரொம்ப வருத்தப்படுவார். அவரிடம் ஒரு கடிதம் வாங்கிட்டு வந்தீங்கன்னா நான் சிபாரிசு பன்றேன் “
இந்த அம்மா வீட்டுக்கு வந்து கணவரிடம் நடந்ததை சொன்னாராம்” ஏன் நீ அங்கே போனே ?” ன்னு கடுமையா கோபப்பட்டிருக்கிறார்
கா. மு .ஷெரிப். “அவர் முதல்வர் பதவி வகிக்காத போது மட்டும் தான் நானே அவரைப் பார்ப்பேன். நீ இப்படி செய்யலாமா ? பையன் அவனா வேலை தேடிக்கட்டும்”என்றாராம் !
“பூவாளூர் சந்தையிலே ஒங்க பொட்டியோட என் பொட்டி ஓரசிக்கிச்சே .. ஞாபகம் இல்லையா !” ன்னு ஈ ன்னு இளிச்சி ஈசிண்டு உறவு கொண்டாடி ஓட்டப்பார்க்கிற உலகத்திலே இப்படி ஒரு பைத்தியக்கார பிரகிருதி !